Wednesday, May 7, 2008

அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர்...! -(5)














அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர்...! -(5)


** கிரேக்க மொழியைப் போலவே தமிழ்
வளமான இலக்கியத்தையும் நவீன
இலக்கியத்தையும் பெற்றுள்ளது.*
*சாதி என்பது சமயப் பழக்க
வழக்கமல்ல: - பேரா.ஜியார்ஜ் ஹார்ட்.

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்"
இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு
தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு
அறிஞரா? இல்லவே இல்லை!
சொன்னவர் அமெரிக்க மொழியியல்
ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்"
என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த தமிழ்பற்றாளர் யார் தெரியுமா? தமிழகத்தில் பிறந்த தவத்திரு தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை!

"என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'' என்று 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.

இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில் சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன் மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச் செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!
இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர் வரிசையில் இன்றைக்கு வாழும்வரலாறாக‌...பேரா.ஜார்ஜ் எல். ஹார்ட் (George L.Hart)!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!

தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்! தமிழைத்தவமாய்,வேதமாய், வேள்வியாய்,சுவாசமாய்,உயிராய்,உணர்வாய் நேசித்துதமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய்
ஆக்கிக்கொண்டுள்ளவர்களின் வரிசையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை"பேரா.ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் இடம்பெறுகிறார்.
தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் பேரா.ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.
இவர் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பலகையில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 லிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர். தமிழ்மொழி பழமையான மொழி; தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள்.
காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி அந்தஸ்து உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங் களுக்குச் சென்றன என்ற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார். இவ‌ரும் பெர்க்கிலி ப‌ல்க‌லையில் த‌மிழ் துறையில் ப‌ணியாற்றிவ‌ருகிறார்.

பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" சமீபத்தில் தனது பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. "தமிழ்ப் பலகை" தலைவர் பேரா.ஜியார்ஜ் ஹார்ட் அவர்களுடனான‌ மின்காணலை இப்போது பார்ப்போம்:

?)1996ல்'தமிழ்ப் பலகை"(Tamil Chair) ஒன்றைப் பெர்க்கிலி பல்கலையில் உருவாக முக்கிய காரணகர்த்தாவானவர்! நீங்கள் பட்ட சிரமத்திற்கு பலன் அடைந்ததாக/நோக்கம் நிறைவேறியதாகக் கருதுகிறீர்களா?

1996ல்'தமிழ்ப் பலகை" என்பது ஓர் அறக்கட்டளை. அது பெர்க்கிலியில் எங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பாடத்திட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளவதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு பணத்தை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கொடுக்கப்பட்ட பணம் மாநாடுகள், மாணவர்களுக்கான ஆதரவு, மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் போன்றவற்றிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்றபிறகு, பெர்க்கிலியில் தமிழ்த்துறை (தமிழ் பீடம்) தொடர்ந்திருப்பதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்தை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. பெர்க்கிலியில் நாங்கள் மேற்கொள்ளும் தமிழ்த் துறை நடவடிக்கை சிறிதளவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக அது எங்களின் தென் ஆசிய மொழிகள் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக இருந்து வந்துள்ளது. கல்வித் துறை சார்ந்த ஒரு திட்டம் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எங்களின் திட்டத்தின் மையமாகக் கூறாக இருப்பது தமிழ்ப்பீட அறக்கட்டளையாகும். திட்டம் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி இருப்பதற்கும் திட்டம் தொடர்வதற்கு மிக அத்தியாவசியாமாகவும் இந்த அறக்கட்டளை உள்ளது.

?)தாங்கள் அழகுபடுத்திக்கொண்டிருக்கும் பெர்க்கிலி தமிழ் இருக்கை பத்து ஆண்டுகள் பூர்த்திசெய்து விழா எடுக்கும் நிலையில் பெர்க்கிலி தமிழ் இருக்கைபோல தமிழர்கள் அதிகம் வாழும் நியூயார்க், சிகாகோ போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கை அமைய தங்கள் ஆலோசனை என்ன?


உலகில் உள்ள வளமிக்க மொழிகளில் தமிழ்
மொழியும் ஒன்று. அதனிடம் (மற்ற நவீன இந்திய மொழிகளைப் போல் அல்லாமல்) உண்மையிலேயே செம்மையான இலக்கியப் பாரம்பரியம் உள்ளது என்பதுடன் முக்கியமான விரிவடைந்து வரும் நவீன இலக்கியமும் உள்ளது. கிட்டத்தட்ட 7 கோடி மக்களால் பேசப்படும் மொழி அது. இருந்தாலும் கூட அது மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. தங்களின் பாரம்பரியம் எவ்வளவு வளமையானது என்பது ஒரு சில தமிழர்கள் மட்டுமே அறிந்துள்ளனர்- தமிழ்நாட்டிற்கு வெளியே மேலை நாடுகளில் கிட்டத்தட்ட அதனைப் பற்றி யாருக்கும் தெரியாது. வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அல்லது தமிழ்ப்பீடத்தை அமைப்பது உண்மையில் பெரிய செயல்தான். டொறோன்டோவில் 3 லட்சம் தமிழர்கள் (பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்) உள்ளனர்- அவர்கள் நிச்சயமாக ஒரு விரிவான தமிழ்த் துறையை தமிழ்ப் பீடத்தை டொறோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைத்து அதற்கான நிதியை நிச்சயம் அவர்களால் வழங்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அமைத்து அவற்றிற்கு வளமூட்டுவது பெரும் பயன்மிக்க சாதனையாக இருக்கும்.

?)பெர்க்கிலியில் தமிழ் விழா என்று வருடம்தோறும் நடாத்தி வருவதில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கச் செய்வதுண்டா?
நாங்கள் நடத்தும் மாநாட்டில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்வதை வரவேற்கிறோம்.
?) 7 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். இப்போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

உண்மை என்ன என்றால், எந்த ஒரு நவீன தென் ஆசிய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழ் மொழியின் கண் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது. தென் ஆசியாவின் மற்ற எந்த நவீன மொழியிடமும் சங்க இலக்கியம் போன்று ஒன்றும் இல்லை, சங்க இலக்கியம் தன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளதுடன் (சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை) கடன் வாங்கிய சொற்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளது. இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை ஏன் எனில் வானம் நீல நிறமானது என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கூறுவது போலத்தான் இருக்கும். எவ்வித பகுத்தறிவுக் கேள்விக்கும் அப்பாற்பட்டு, தமிழ் மொழியிடம் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது. இந்திய அரசாங்கம் இந்த உண்மையை இறுதியில் உணர்ந்து கொண்டு முடிவு செய்தது நல்ல செயல்தான் இருந்தாலும் இந்த முடிவு அரசியல் அடிப்படையில் பெரிதும் தீர்மானிக்கக்பட்டதாகத் தெரிகிறது. கன்னட மொழியின் தொடக்ககால இலக்கியம் அதன் மரபுகளையும் அதன் சொற்களையும் சமஸ்கிருதத்ததிலிருந்து பெற்றது என்ற போதும், இந்திய அரசாங்கம் தற்போது கன்னட மொழியை ஒரு செம்மொழியாக அறிவிக்க உள்ளது. அதனிடம் வளமான பாரம்பரியம் உள்ளதுதான் ஆனால் அது ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியை விட செம்மையான மொழியல்ல. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

?)ஹார்வர்டில் இயற்பியல் படிக்கப் போய் தமிழ் படிக்க நேர்ந்தது குறித்துச் சொல்லுங்களேன்?


வேதியில் மற்றும் இயற்பியலிலிருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் துறைக்கு பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொடுத்த பல ஆண்டுகள் கழித்து மாறினேன். எப்படி மாறுவதற்கு இயற்பியல் பேராசிரியடம் கையொப்பம் நான் பெறவேண்டும். அவரிடம் என் திட்டத்தைச் சொன்னபோது நான் வேடிக்கையாகச் சொல்கிறேன் என்று நினைத்தார். ஆனால் என் திறன்கள் – என்னிடம் திறன்கள் இப்பினும் – அவை மொழிகளைக் கற்றுக்கொள்வதில்தான் இருந்தன. சமஸ்கிருதத்தின் பால் நான் மிகவும் ஆழமாக ஆர்வம் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளைக் கற்றிருந்தேன். ஆகவே அற்றுடன் தொடர்புடைய சமஸ்கிருத மொழியின் அமைப்பு முறை வளர்ச்சி குறித்து நான் வியப்புடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். அதன்பிறகு, நான் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டேன். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிடமும் மிகவும் பழைமையான வளம் மிக்க இலலக்கியம் இருக்கிறது. நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதும், நான் அதன் மொழியியல் அமைப்பு முறை, சொற்றொடரியல் ஆகியவை குறித்து, அவை இந்தோ-ஐரோப்பிய முறை சார்ந்ததல்ல, என்பதால் ஈர்க்கப்பட்டேன். மற்றொன்றையும் நான் சொல்வேன், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் கணினிக்கு அதிகமான அளவில் பொருத்தமுள்ள மொழி. ஏன் சமஸ்கிருத்தத்தில் மிகவும் சிக்கல்மிக்க இலக்கண முறை உள்ளதுடன் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியின் அசாதாரணமான சிக்கல்தன்மையை விலக்கி ஆண்டது பாணினியாரின் பெரும் சாதனையாகும். அதனை அவரால் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடிந்தது என்பதால் அம்மொழியை இலக்கண வாய்ப்பாட்டு முறையில் தலைசிறந்ததாக ஆக்கி விடவில்லை. திராவிட மொழிகள் நேர்த்தியான, சீரான அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. (தமிழ் மொழியில் எண்களை எண்ணிப்பாருங்கள் அதே வேளையில் இந்தியிலும் எண்ணிப்பாருங்கள்).

?)கணினியில் தமிழில் எழுத மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எதனால்? என்னவிதமான மென்பொருளை உருவாக்கினீர்கள்? தற்போது அந்தமென்பொருளை எவராவது பயன்படுத்துகிறார்களா?
தமிழுக்காக ஒருங்குறியீடு முறை செயல்படுத்தப்பட்டதுதான் இதன் தொடர்பில் ஏற்பட்ட அதி முக்கிய வளர்ச்சியாகும். இது தொடர்ந்து உருவாகி வரும் ஒன்று. துரவதிர்ஷ்ட்டவசமாக தமிழுக்கு பல மாறுபட்ட (லிசா மற்றும் மெக்கின்டோஷில் நாங்கள் 70களில் உருவாக்ககியது உட்பட) குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணையத்தளமும் வெவ்வேறான எழுத்துருக்களையும் எழுத்துக் குறியீட்டு முறையையும் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆங்கில இணையத்தளமும் மாறுபட்ட, அஸ்கி குறியீட்டு முறை அல்லாத எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்ற தோரணையில் இது செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். முழுமையான எழுத்து ஒருங்குறியீடு முறையீடு இன்றி, கணினியில் தமிழ் பயன்பாடு பரவலாக இருக்காது.

?)பெர்க்கிலி தமிழ் இருக்கையில் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தமிழ்த்துறையில் ஏதும் சாதனை செய்திருக்கிறார்களா?
எங்களின் அறக்கட்டளை பல மாணவர்களுக்கு ஆதரவளிக்க எங்களுக்கு உதவியுள்ளது. காலப்போக்கில், நாங்கள் அளித்த ஆதரவின் வழி பலர் பயன் அடைந்ததுடன் அவர்கள் தங்களின் படிப்பையும் முடித்துக்கொண்டுள்ளனர்.

?)30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய நூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைஇன்றைய நிலையில் உங்கள் கோணத்தில் பார்க்கும்போது இப்படி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியதுண்டா?


எனது அடிப்படைக் கருத்துக்களை நான்
திருத்திக்கொள்ளவில்லை. மொழிபெயர்ப்புகள்
நன்றாகவும் தடைகளற்ற சுமூக ஓட்டத்துடன்
இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் மொழிபெயர்க்கும்போது இங்கும் அங்குமாக
சில துரவதிர்ஷ்டவசமான தவறுகளைச் செய்தேன்
தமிழ் போன்ற மொழியை ஒருவர் பயிலும்போது,








அதன் நுட்பங்களைக் காலப்போக்கில் இயல்பாக ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை மேம்படும். என்னுடைய முக்கிய பகுத்தாய்வவின் முடிவு என்னவென்றால், தொடக்ககாலத் தமிழ் இலக்கியமும் மகாராஷ்டிர பிரகிருதியும் தென் இந்திய இலக்கியப் பாரம்பரியங்களுக்கு, பல மரபுகளும் உட்பட, அதிகப் பங்களித்துள்ளன. இந்தக் கருத்துக்களை சமஸ்கிருதம் கடன் வாங்கிக்கொண்டதுடன் அனைத்து இந்தியக் கலாசாரத்தின் ஓர் கூறாக ஆகிவிட்டது. பருவ மழைக்காலத்தின்போது பிரிந்திருத்தல், மற்றும் தூதுவிடு கவிதை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

?)தமிழகத்தில் சாதிமதங்கள் உங்கள் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?





இதில் நான் என்ன சொல்ல? என் இந்திய
நண்பர் ஒருவர் அண்மையில் இந்தியா
விலிருந்து திரும்பி வந்தார். அவர்
அங்கு தலித்துகளுடன் பணியாற்றினார்.
அங்குள்ள பிள்ளைகள் அவரின் மனதில் ஆழமாகக் கவர்நத்துள்ளனர். அவர்கள் அசாத்திய அறிவு கொண்டுள்ளவர்களாகவும், கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களாகவும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதை அவர் கண்டார். ஆனால் நவீன இந்தியாவில் அரசியலும் சமூகக் கருத்துக்களும் அவர்களின் தற்போதைய நிலையை இழக்கச் செய்ய செயல்படுகின்றன. சாதி மறைந்து வரவில்லை, அரசியலுக்கு அது மையப்பொருளாக ஆக ஆக இப்போது அது வலுவடைந்து வருவதாகவே தெரிகிறது. பகுதறிவுக்குப் புறம்பான சாதி, என் நண்பர் பணியாற்றிய தலித்மக்களின் பிள்ளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று. மனித ஆற்றலையும் திறன்களையும் விரயப்படுத்துவதற்கு அது வழிவிடுகிறது. சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்தது.. தமிழ் நாட்டில் எல்லா சமயங்களிலும் சாதி பாகுபாடுகள் இருப்பதைக் காணலாம்.

?)வடமொழி இலக்கியத்திற்கு சரியான மாற்று இலக்கியம் தமிழில்தான் உள்ளது என்று நீங்கள் உரத்துச் சொல்வது குறித்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லமுடியுமா?



என்னுடைய கருத்து என்னவென்றால்
சமஸ்கிருதமும் தமிழிலும் ஒன்றுக்கு
ஒன்று உறுதுணையாக உள்ளன.

தொடக்ககால தமிழின் தனித்தன்மை வாய்ந்த அம்சங்களில் ஒன்று என்னவென்றால் சமூக ஏணியில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் கருத்து நிலைப்பாட்டு அடிப்படையிலேயே பேசுகிறது. சமஸ்கிருதம் மேல்தட்டு மக்களின் மொழி (அதன் பெயரே "பண்பட்ட" அல்லது "உயர்ந்த" என்ற பொருள்படும்)அது தென் ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் (கம்போடியாவிலும் இந்தோனேசியாவிலும் அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது) உள்ள மக்களின் பேசும் மொழியாக ஆகியது, ஆனால் அதன் தொடக்க காலத்திற்குப் பிறகு அது கற்றோரின் மொழியாக மாறியது. அதனிடம் மிகப்பெரிய இலக்கியங்கள் உள்ளன சமணம் மற்றும் மகாயான புத்தமதம் போன்ற பல மதங்களின் அடிப்படைப் பனுவல்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் தமிழ் மொழியோ பேச்சு வழக்கில் உள்ள மொழியாக இருந்தது. அதன் இலக்கியம் எப்போதுமே தமிழ் நாட்டு மண்ணில் வேரூன்றியிருந்ததைப் பிரதிபலித்தது. இது அதற்கு வளமையையும் தரத்தையும் கொடுத்தது. சமஸ்கிருதத்தையும் அதன் மேல்மட்டப் போக்கையும் பின்பற்றிய மற்ற இந்திய மொழிகளிடம் நவீன காலம் வரை தமிழிடம் உள்ள கூறுகள் இருக்கவில்லை.

?) இதேபோல தமிழ் இலக்கியத்தின் விரிவு கிரேக்க இலக்கியத்தில் கூட கிடையாது என்று ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கிறீர்களே?





கிரேக்க மொழியைவிட தமிழ் வளமான அல்லது விரிவானது என்று நான் கூறவரவில்லை. கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது. பிளாட்டோ, அரிஸ்டோட்டில், ஹெரோடோட்டஸ், துசிடைடஸ் போன்றோர் தமிழில் தொடக்ககாலத்தில் இல்லை. இருந்தாலும் சங்கத் தமிழைப் போல கிரேக்கர்களிடம் ஒன்றும் இல்லை. இரு மொழிகளுமே அதி வளமிக்கவை.

?) தமிழ்ப்பண்பாட்டில் நீங்கள் இன்னும் ஆராய்ந்து பார்க்கப்படவேண்டிய விசயங்கள் என்று எதையாவது எண்ணியதுண்டா? தமிழ்ப்பண்பாட்டில்
நீங்கள் மிக விரும்புவது எதை என்று குறிப்பாகச் சொல்ல இயலுமா?

சில சங்க காலப் பாடல்களை நான் படித்துணரக்கூடிய நவீன தற்போதைய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். மூலத்தைப் படித்தறிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் மொழியை அறியாதவர்களுக்கு தமிழ் மொழியின் வளமையை வெளிப்படையாக அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும். தமிழ்ப் பண்பாட்டைப் பொருத்த அளவில் அது இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தியாச் சமுதாயமும் பண்பாடும் பல பிரிவுகளைக் கொண்டது. அது தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். ஒரு பிராமணர் அல்லது ஒரு வேளாளருடன் ஒப்பிடுகையில் ஒரு மீனவரிடம் மிகவும் மாறுபட்ட கலாசாரமும் கருத்தும் இருக்கும். காலனித்துவ ஆட்சிக்குப் பிந்திய பல நாட்டு மக்களைப்போலவே தமிழர்களும் தங்களின் உண்மையான அடையாளத்தைக் காணத் துடிக்கின்றனர். அப்படி அதைச் செய்யும் வேளையில் அவர்கள் சில சமயங்களில் தங்களின் வழியை இழந்துவிடுகின்றனர். உலகின் முதல் மொழி தமிழ்தான் என கற்பனை செய்கின்றனர், அல்லது இந்து சமவெளி மக்கள் தமிழ் பேசியதாகவும் நினைக்கின்றனர். அவர்கள் செய்த தவறு என்னவெனில், உலகின் மற்ற மாபெரும் இலக்கியங்களைப்போலவே தமிழ் இலக்கியமும் வாழ்வுக்கு மாபெரும் வளமாக அமைந்திருப்பதுடன் வாழ்க்கையை மேலும் வளமாக்குவதுடன் பொருள் நிறைந்ததாகவும் ஆக்குகின்றது என்பதை உணராதிருப்பதுதான். தமிழ் மொழியில் உள்ள மாபெரும் படைப்புக்களைப் படித்தறியாமல் தமிழை மட்டும் பேசிக்கொண்டு வளர்ந்தார்களானால், அவர் தனக்குத் தானே இழப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் தனது உலக அனுபவத்தையும் சிறப்பாகப் பெறாமல் போய்விடக்கூடும். தமிழர்கள் அல்லாதவர்கள் அம் மொழியைக் கற்றுக்கொண்டால், அதன் வளமான இலக்கியத்திலிருந்து பெரும் பயன் அடைவார்.


?)கம்பன், இளங்கோவடிகள் இவர்கள் இருவரின் படைப்பில் தங்களுக்கு மிகப் பிடித்தது எது? ஏன்?

கம்பனைப் (கம்ப இராமாயணத்தை) படிப்பதில் நான் பல ஆண்டுகளைக் கழித்துள்ளேன். ஆனால் அதேபோல் இளங்கோவைப் (சிலம்பை) படிப்பதில் அவ்வளவாகக் காலத்தைச் செலவிடவில்லை. என்னைப் பொருத்தவரை, இந்திய படைப்பாளர்களில் கம்பனே தலைசிறந்தவன். ஒரு நாகரித்தை, கலாசாரத்தை (சோழர்களின்) முழுமையாக உள்ளடக்கிய ஒரே இந்தியப் படைப்பாளர். அவவாறு செய்த மற்ற ஒரே ஒரு இந்தியப படைப்பு வியாசரின் மகாபாரதமாகும், அது உண்மையில் ஒருவரால் உருவாக்கப்பட்ட படைப்பு அல்ல என்பது தெளிவு. கம்பனின் மொழிப் பயன்பாடு, சந்தம், நாடகப் படைப்பாற்றல் ஆகியவற்றை விவரிக்க இயலாது. ஆனால், பல வகையில் சங்க இலக்கியங்களுக்குப் பின்னோக்கிச் செல்லும் உலகம் பற்றிய அடிக்கடி மாறுபடும் அவரின் கருத்து, என்னைக் குறிப்பாக அதிக ஆர்வம் கொள்ளச் செய்கிறது. எடுத்துக்காட்டாகச் சொன்னால், ராக்ஷசர்களைப் பற்றி அவரின் அசாதாரணமாக வகையில் எழுத்தோவியமாகக் காட்டுவதைக் கூறலாம். கம்பனைப் படிக்கும் எவரும் இராவணன் அல்லது சூர்பனகைப் பாத்திரங்களை மதித்துப் பாராட்டவும் அவர்கள்பால் பரிவு காட்டவும் தவறுவதில்லை – அவர்கள் சாதாரண மக்களுக்கு பலவீனங்கள் உள்ள மனிதர்களைப் போல சித்தரிக்கப்படுகின்றனர். அறத்தை நிலை நாட்டுவதாக கம்பனின் படைப்பு இருந்தாலும் அது ஒரு துன்பியல் மற்றும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் காவியமும் கூட.

?)சிலம்பில் நீங்கள் உடன்படாததாகக் கருதுவது எதை?

நவீன கருத்துக்களை பண்டைய இலக்கியப்


படைப்புகள் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது
தவறு. உண்மையில், சிலப்பதிகாரத்தில் பெண்கள்
நடத்தப்பட்ட விதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் அதே வேளையில் ஆழமான கவிதையையும்
மனிதர்களின் நிலை குறித்த ஆழமான பார்வையையும்
அது கொண்டிருக்கவில்லை என்று கூற முடியாது.

?) அகநானூறு மொழிபெயர்ப்பில் ஈடுபட ஏதும் காரணம் உண்டா? அகநானூறில் தங்கள் சிந்தை சிலிர்க்கவைத்ததை சிலாகித்துச் சொல்ல இயலுமா?

புறநானூறு மனதை ஈர்த்துக் கட்டிப்போடும்


படைப்பாகும். ஒவ்வொரு கவிதையும் என்
ஆற்றலுக்குச் சவால் விடுவதாக உள்ளது.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பல மரபுகளைப்
பயன்படுத்தப்பட்டுள்ளது. மரபுசார்ந்த, அலுப்புத் தட்டக்கூடிய
படைப்பாக அது இல்லாமல் ஆக்குவது என்ன என்றால்,
ஒவ்வொரு கவிதையிலும் எதிர்பாரா, கருத்தைக்கவர்கிற
ஒன்றைப் புலவர்கள் சேர்ப்பதுதான். எடுத்துக்காட்டாக,

பாடல் 123ல், காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்,
செல்வம் திரட்டப் பாலைவனத்தைக் கடந்து செல்வதா
அல்லது தன் அன்புக்குரியவளோடு இருப்பதா என
ஆடவன் தன் மனதோடு சஞ்சலத்துடன் பேசுவதை
விவரிக்கிறார்:

Truly, you are pitiful, my heart -- you cannot decide
whether to bring wealth or not, and you are like the flood
that comes in with shrimps and goes out with garlands 10
in the bay where the ocean is entered by the Kaviri,
too deep for poles, in the land of the generous Cholas
whose long spears rubbed with ghee have blades
that flash like lightning and whose many shields are like clouds.

நிலவு என நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்மழை மருள் பல் தோல் மா வண் சோழர்கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துரைஇறவொடு வந்து கோதையொடு பெயரும்பெருங் கடல் ஓதம் போலஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கேஇந்த உருவகம் மறக்க இயலாத ஒன்று – இறால் மீன்களைக் கரைக்குக் கொண்டு வந்து கடற்கரையில் வீசப்பட்ட மாலைகளை கடலுக்குள் எடுத்துச் செல்லும் கடல் அலைகளுடன் அதுவா இதுவா என மனம் கலங்கும் மனித இதயத்துடன் ஒப்பிடுவதை யார்தான் கற்பனை செய்து பார்த்திருக்க முடியும். இந்த உருவகத்தை இன்னும் மேலும் சிந்தித்துப் பார்த்தீர்களானால் அதில் உள்ளார்ந்து கிடக்கும் நுட்பமான விஷயங்களையும் புரிந்துகொள்வீர்கள்.


பொழுதுபுலரும் வேளையில் பெர்க்கிலிபல்கலை....


பெர்க்கிலி நூலகம்....

-மின்காணல்:-ஆல்பர்ட் ஃபெர்னான்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.

Saturday, February 9, 2008

அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர் (4)

தமிழ் வளர வேண்டுமென்றால்
தமிழன் வாழ வேண்டும் , வளரவேண்டும்
- கலிஃபோர்னியாகுமார் குமரப்பன் !

ந‌ம் த‌மிழ் மொழியை அய‌ல் மண்ணாம் அமெரிக்க மண்ணில் அறிவுசார் ப‌ல்க‌லைக்க‌ழ‌கம் ஒன்று கற்றுக் கொடுக்கிறது. அந்தப் பல்கலைக்கழகம் பெர்க்கிலி பல்கலைக்கழகம். கலிஃபோர்னியாவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்க முன்னின்று முயற்சி கண்டவர்களுள் கலிபோர்னியாவைச் சேர்ந்த நா.குமார் குமரப்பன் அவர்களும் ஒருவர்.

தமிழகத்தில் B.E., (Electronics & Communication Engineering); அமெரிக்காவில் M.S.(Electrical Engineering) படித்த இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கலிபோர்னியாவை (சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி) இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருபவர். ரிக்கோ நிறுவனத்தில் இயக்குனராக (Director of Engineering, Ricoh Corporation.) இருக்கிறார்.

எந்த ஒரு சூழலிலும் மனித நேயத்துடனும், ஆகாயத்தைப் பார்த்து அற வாழ்விற்கு தடம் போட முயலாமல் அக்கம் பக்கத்தின் சமூகப் பிரச்சனைகளில் அக்கரை கொள்கிறவராகத் திகழ்கிறார். இத‌னால் பொதுந‌ல‌ப் பொறுப்புக‌ள் ப‌ல‌ இவ‌ரைத் தேடி வ‌ந்து சேர்ந்து கொண்ட‌து.

1980 - சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவிய குழுவில் ஒருவர்.

1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவிய நிதி திரட்டும் குழுவிற்குத் தலைவர்.

2002 - உத்தமம் (INFITT) சார்பாக, சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த தமிழ் இணைய மாநாட்டிற்குத் (TI 2002) துணைத் தலைவர்.

உத்தமத்தின் (INFITT) தற்சமய பொருளாளர்.

கலிபோர்னியா தமிழ் கழகத்தின் (CTA - California Tamil Academy)துணைத் தலைவர் - இது கலிபோர்னியா தமிழ் அமெரிக்கர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் முயற்சி - தற்சமயம் கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் இங்கு தமிழ் கற்கின்றார்கள்.

ஈழத் தமிழர்களின் துயரில் பங்கு கொண்டு, இங்குள்ள TNC (Tamils of Northern California)அமைப்பின் மூலம் சிறு சிறு முயற்சிகள்

-என்று இவரின் தமிழ் வளர்ப்பு முயற்சிகள் மூலம் உதவ முயலும் இவ‌ரின் மனித நேயம் என்ற தொண்டு க‌ரைகாணா க‌ட‌லாய்த் தொட‌ர்கிற‌து. இனிமை, எளிமை, நேர்மை என்ற‌ ப‌ண்புக‌ளில் மிளிரும் நா.குமார் குமரப்பன் அவ‌ர்க‌ளின் மின்காண‌லில் புகுவோமா?

? த‌மிழ‌க‌த்திலிருந்து இங்கு வ‌ந்த‌ ப‌ல‌ர் த‌ம் தாய்மொழியைத் தொலைத்து, த‌மிழ‌ர்க‌ளோடு த‌மிழில் பேசாமல் ஆங்கில‌த்தில் உரையாடுகிறார்களே? இது குறித்துத் த‌ங்க‌ள் க‌ருத்து என்ன‌?

இதற்குரிய பதில் சற்று சிக்கலானது. ஆங்கில அறிவு இன்றைய நடைமுறைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது என்பது உண்மை. இருப்பினும் தமிழகத்திலேயே வாழும், ஆங்கிலம் அவ்வளவு தேவையில்லாத , சராசரி தமிழன் கூட தம் ஆங்கில அறிவை வெகுவாக வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு ஆங்கிலத்திலேயே பேச முயற்சிக்கின்றான். இங்குள்ளவர்களுக்கு வேலையிலும் மற்ற பல சூழல்களிலும் தமிழ் இல்லாததால், சிலருக்கு பல வருடங்களில், தமிழிலேயே பேசுவது கடினமாகிப் போகின்றது. மற்றும் பலருக்கோ ஆங்கிலத்தில் உரையாடுவது ஒரு வரட்டு கௌரவமாகி விட்டது. மொத்தத்தில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் வேற்று மொழிச் சொற்கள் உபயோகிப்பது இயல்பாகிக் கொண்டிருப்பது நிதர்சனம். இந்த சாபக்கேடு தமிழ் மொழிக்கு மட்டுமே என்று கூற முடியாது. இருப்பினும் நம் சமூகத்தில் இது சற்று அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது .

இந்த போக்கை மாற்ற நம் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களுக்கும், நம் வெகுசன ஊடகங்களுக்கும், இங்கே ஒரு பொறுப்பு உண்டு. ஆனால் அவர்களோ பொல்லாத சில பேர்க்கு இது நாகரீகம், புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்' என்ற கவிஞனின் வாக்கை மெய்பிப்பது போல், தம் நடைமுறைகளை மேற்கொள்கின்றார்கள். அதாவது தமக்கே உரித்தான செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தச் சாய்வினை நிறுத்த / மாற்ற முயற்சிக்காமல் அதை வலுப்படுத்தவே முனைகின்றார்கள். இந்த வலையில் விழாமல், தமிழனின் மனப்போக்கு மாற வேண்டுமென்றால் தமிழன் பொருளாதரத்தில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும். தனது மொழி மீதும், இனத்தின் மீதும் நியாயமான பற்றுக் கொண்டு பெருமிதத்தோடு வாழ நம் மொத்த சமூகத்தின் பொருளாதர மேன்மை பெரிதும் உதவும் என்றே நம்புகின்றேன்.

? சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நீங்க‌ள் த‌மிழ் ச‌ங்க‌ம் அமைக்க‌ தூண்டுத‌லாயிருந்த‌து எது?

மொழி, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே உண்டாக்கப்பட்ட ஒரு கருவி அல்ல. நம் கலாச்சாரமும், வரலாறும், தற்சமய வாழ்க்கை முறைகளும், நம் மொழியில் அது தரும் அறிவில் புதைந்து கிடக்கின்றன. நம் மொழியைச் சுற்றியுள்ள ஒரு சூழல்தான் எனக்கு இயல்பானதாகத் தெரிகின்றது, இதமான ஒரு நிறைவைத் தருகின்றது. அடிப்படைத் தேவைகளுக்குப் பிறகு என் மனம் தேடியது இந்த சூழலைத்தான். புலம் பெயர்ந்து வாழ வந்த இந்தப் பகுதியிலும் இந்தச் சூழலை உண்டாக்கத் தேவையான முக்கியாமான தளமாக நான் கருதியது ஒரு உள்ளூர் தமிழ்ச் சங்கத்தைத்தான். மேலும் தமிழனுக்கு ஆண்டாண்டு காலமாகத் தமிழ்ச் சங்கம் தொடங்கும் பாரம்பரியமுண்டு. வளமான நம் மொழியும், கலாச்சாரமும் தொலைந்து விடாமலிருக்க, அது பெருக, பழந்தமிழன் இந்த 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளத்தை பேணி வளர்த்து, பாதுகாத்து போற்றியிருக்கின்றான். இந்த தாக்கமும் என்னிடம் இயல்பாக இருந்திருக்க வேண்டும்.

நம் முப்பாட்டனும், பாட்டனும் வளர்த்து பராமரித்து நம்மிடம் ஒப்படைத்து விட்டுப் போன நம் மொழியை, கலாச்சாரத்தை நாமும் நம் சந்ததியரிடம் முறையே சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டு. இதற்கெல்லாம் ஒரு வடிவம் கொடுப்பதுதான் 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளங்கள். இந்த தாக்கங்களுடன்தான், ஒத்த கருத்துடைய சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து 1980-ல் 'சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ' என்ற தமிழ் மன்றத்தைத் தொடங்கினோம். இத்தமிழ் மன்றத்தின் இன்றைய இணையத் தள முகவரி: http://www.bayareatamilmanram.org

? நீங்க‌ள் த‌மிழ் ச‌ங்க‌ நிர்வாகியாக‌ இருந்த‌கால‌த்தில், த‌மிழ் வ‌ள‌ர்ச்சிக்கு‌ நீங்க‌ள் முன்னெடுத்த‌‌ முய‌ல்வுக‌ள் குறித்துச் சொல்லுங்க‌ளேன்?

நான் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் முதல் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்தேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொடங்கும் தமிழ்ச் சங்கங்க‌ளை ஒருங்கிணைத்து நடத்தும் வாடிக்கையான நிகழ்ச்சிகளை எங்கள் தமிழ் மன்றமும் நடத்தியது. அத்துடன் நின்றுவிடாமல் ஓரிரு வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம் . தமிழர்கள் கூடிட ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது, தமிழர் பண்டிகைகள் கொண்டாடுவது, தமிழ்த் திரைப்படங்கள் திரையிடுவது என்பன சில முயற்சிகள். இம்முயற்சிகள் தமிழ் மன்றங்களின் வாடிக்கையான செயல்களே. இது தவிர சில வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம். இதற்கு அதிக உந்துதலும், நேரமும், முயல்வும் தேவையாகயிருந்தது. இந்த வேறுபட்ட முயற்சிகள் வருமாறு:

அ) இலக்கிய கூட்டங்கள் இல்லையில்லை இதைக் கலந்துரையாடல் என்றே சொல்லவேண்டும். எங்கள் மத்தியில் யாரும் பேராசிரியர்களோ , இலக்கிய வல்லுனர்களோ இல்லை. இருந்தும் ஆர்வலர்கள் சிலர், தமக்குப் பிடித்த தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டு, அதை விரித்துக் கூறி, கூடியிருந்தவர்களுக்கு அவ்விலக்கிய நூலில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த முயல்வது.

ஆ) எங்களில் சிலரிடம் தமிழ் நூல்கள் ஓர் அளவிற்கு சேர்ந்திருந்தன. இதையெல்லாம் ஒன்று திரட்டி, சிறிய நடமாடும் நூலகம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழ் ஆர்வமுள்ளவர்களுக்கு சுழல்முறையில் தமிழ் நூல்கள் கொடுத்து வாங்க ஏதுவாக இருக்க வழி செய்தோம். சிலருக்கு தமிழ் நூல்களில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் முயன்றோம்.

இ) சிறுவர்கள் தமிழ் கற்க தமிழ் வகுப்புகளை வடிவமைத்து நடத்தி வந்தோம்.

ஈ) கணினியில் தமிழ் தட்ட‌ச்சடிக்க வசதிகள் இல்லாத காலம். தமிழிலலேயே அறிக்கைகள் வெளியிட, ஆவணங்கள் உருவாக்க, தமிழகத்திலிருந்து தமிழ் தட்டச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி இங்கு வரவழைத்துப் பயன்படுத்தினோம்.

உ) சில தமிழ் நாடகங்கள் மேடையேற்றினோம்.

? ச‌மூக‌ப் பிர‌ச்னைக‌ளில் அக்க‌றையோடு ஈடுப‌டும் தாங்கள், குறிப்பிடும்ப‌டியான‌ பிர‌ச்னைக‌ளில் ஈடுப‌ட்டு அதில் வெற்றிகிட்டிய‌ நிக‌ழ்வுக‌ள் குறித்துச் சொல்ல‌ இய‌லுமா?

சமூக அக்கறையினால் அதன் பிரச்சனைகளில் ஈடுபாடு கொண்டு, அதை எதிர்த்து வன்மையாகப் போராடி, அதற்கு ஒரு தீர்வு கண்டு , அதில் மன நிறைவு கொண்ட அனுபவங்கள் எனக்கு உண்டு என்று கூற முடியாது. நம் சமூகத்தின் பல பிரச்சனைகள் இன்றும் தொடரும் பிரச்சனைகள்தான்.

தமிழகத்தில் காணும் ஏழ்மை, அதனால் ஏற்படும் கொடுமைகள், இதனால் அடிபட்டுப் போகும் மனித நேயம், இவை யாவும் சமூக அக்கறை கொண்ட எவரையும் உறுத்தத்தான் செய்யும். நம்மால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு உதவிகளைத்தான் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனங்களின் மூலம் செய்ய முடிகின்றது. குறிப்பாக அனாதை / ஏழைக் குழந்தைகளின் அவலங்கள் ஒரு பெருங்குறையே. இதில் அடங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் இருக்க, எங்களால் முடிந்த ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் தத்தெடுத்து எங்கள் மகளாக இங்கு வளர்க்கின்றோம் . இது பெரும் மனநிறைவைத் தருகின்றது. அதற்கும் மேலும் எங்கள் மகளின் செய்கைகள் தரும் இன்பங்கள் எங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை.

மூட நம்பிக்கைளில் ஊறிப் போனது நம் சமூகம். ஆழமான ஆன்மீகத்திற்கும், ஆடம்பரமான சடங்குகளுக்கும் வேறுபாடு தெரியாமல் வெத்துக் கூத்துகளில் மூழ்கியிருப்போர் அநேகர். இவர்களை மாற்ற பல தலைமுறைகள் தேவை என்றே தோன்றுகின்றது. நான் முயற்சிப்பதோ என்னை சுற்றியுள்ள நண்பர்களும் சொந்தங்களும் இந்த வலையில் சிக்காமல் இருக்கத் தேவையான ஈடுபாடே. இதுவே எனக்கு ஒரு சவால்தான்.

நியாயமான மொழிப்பற்றும் இனப்பற்றும் அற்று நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொலைத்துக் கொண்டு வருபவர்கள் பெரும்பான்மையானோர். இதுவும் என் கண்ணோட்டத்தில் நம் சமூகப் பிரச்சனையே. ஆயினும் என்னால் முடிந்தது என்னைச் சுற்றியுள்ள, குறுகிய சிலரிடம் மட்டுமே ஒரு விழிப்புணர்வை, மாற்றத்தை உண்டு பண்ண முடிகின்றது. ஆக இது போல் பலவும் தொடரும் பிரச்சனைகளே.

நாம் முனைப்போடு நம் தகுதிக்கேற்ப முயன்றாலும், தீர்வுகள் அவ்வளவு எளிதாகத் தென்படுவதில்லை. நாமும் நம் முயற்சிகளில் குறை வைப்பதில்லை. நம் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் என்ற தெளிவு உண்டு.

? த‌மிழ் குழந்தைகளுக்கு தமிழ் க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் ஏற்ப‌ட்ட‌ போது அதைச் செய‌ல்ப‌டுத்த‌ எண்ணிய‌ உங்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட ஆதர‌வின்மை, தோள் கொடுத்த‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் என்ற‌ இருவேறு நிலைக‌ளில் உங்க‌ள் ம‌ன‌நிலை எப்ப‌டி இருந்த‌து?

1980 களில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் மூலமே முதல் முதலாகத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதை செயல்படுத்த முயற்சிக்கப்பட்டது. தமிழ் கற்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே முக்கியமான சில கருத்து வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்தன. இந்தக் கருத்து வேறுபாடுகள் தமிழ் மன்றத்தின் புது உறுப்பினர்களிடமிருந்துதான் வர ஆரம்பித்தது. தமிழ் மட்டும் கற்றுத் தருவது போதாது, நம் கலாச்சாரத்தையும் நம் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டும். நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சம் தெய்வ வழிபாடு. அதற்கு உகந்த சம்ஸ்கிருத சுலோகங்களும் சொல்லித் தர வேண்டும் என்று ஒரு சாரர் பிடிவாதம் பிடிக்க மேலும், தமிழ் பயில வருபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பெரிய அளவில் இல்லாததால், தமிழ் கற்பிக்கும் முயற்சிகள் 80-களில் பிசுபிசுத்துப் போய் விட்டது. பிறகு தமிழ் மன்றத்தின் மூலம் தமிழ் கற்பிக்கும் முயற்சியே காணாமல் போய்விட்டது . இது வருத்தத்திற்கு உரிய ஒரு விடயம்தான். பல ஆண்டுகள் கழித்து , தமிழ் மன்றம் மூலம் இல்லாமல், தனியார் முயற்சிகளால், மீண்டும் தமிழ் கற்பிக்கும் படலம் துளிர் விட ஆரம்பித்தது.

? பெர்க்கிலி ப‌ல்க‌லை த‌மிழ் இருக்கையில் த‌ங்க‌ள் ப‌ங்க‌ளிப்பில் மன நிறைவு அடைந்த நிகழ்வு குறித்து...?

பெர்க்கிலி பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை சராசரி அமெரிக்கத் தமிழர்களின் முயற்சியால் சாத்தியமானது. 1991ல் ஆரம்பமான இம்முயற்சி 1997ல் தமிழ் இருக்கையை நிறுவிய பின்னரே நிறைவு பெற்றது. இந்த இருக்கை அமைக்கத் தேவையான நிதி திரட்டும் குழுவிற்கு நான் தலைமை தாங்கினேன். இந்தத்தமிழ் இருக்கை இன்று பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது . பல தமிழ் அமெரிக்கர்களின் பிள்ளைகள் பெர்க்கிலியில் தமிழ் கற்க உதவியாக உள்ளது. மேலும் , வட அமெரிக்காவில் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்வோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பைத் தருகின்றது . "Tamil is one of the best kept secrets. தமிழ் ஆராய்ச்சிகளை தமிழர்களே தமிழில் செய்து வருவாதால்தான் தமிழின் பெருமை உலகத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை", என்ற கருத்து தமிழ் இருக்கையின் தலைவரான பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் எங்களிடம் பகிர்ந்து கொண்ட ஒன்று. அதை நிவர்த்தி செய்வது போல், நாம் மேற்கத்தியர்களிடமும் உலக அறிஞர்களிடமும் நாம் தமிழைக் கொண்டு செல்ல , பெர்க்கிலி தமிழ் இருக்கை ஒரு நல்ல அடித்தளம் . பெர்க்கிலி தமிழ் இருக்கையில் ஆராய்ச்சி மாணவர்களாக இருந்த சிலரே இன்று மற்ற அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் தெற்கு ஆசிய மையங்களில் ஆராய்ச்சி / ஆசிரியர்களாக இருப்பதே இதற்கு நல்ல சான்று. இதுவே நம் உழைப்பின் பயன். மற்றும் தமிழ் இருக்கை இங்கு பெர்க்கிலிக்குத் தமிழ்ப் பேராசிரியர்களையும் அறிஞர்களையும் அழைத்து வந்த பொழுது, சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் 'Fireside Chats' என்ற தொடரின் மூலம் தமிழ் சார்ந்த தலைப்புகளில் அவர்கள் சுவையான கலந்துரையாடலில் பங்கு கொண்டது அறிவு சார்ந்த மனதை விரிவாக்கும் அனுபவம்.

? உத்த‌ம‌ம் குறித்தும் அதில் உங்க‌ள் ஈடுபாடு குறித்தும் உத்த‌ம‌த்தின் சாத‌னையாக‌ நீங்கள் க‌ருதுவ‌து குறித்தும் ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்?

தமிழ், இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அறிவு சார்ந்த துறைகளிலும், தற்கால ஊடகங்களிலும், கணினியிலும், இணையத் தளங்களிலும், சிக்கலின்றி வளம் பெற்று பெருகுவதற்கான தடத்தை, தளத்தை, தமிழர்களாகிய நாம் தமிழுக்கு அமைக்க வேண்டும். அந்தப் பின்னனியில் உருவானதே உத்தமம். உத்தமம் (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம். INFITT - International Forum for Information Technology in Tamil) என்பது தமிழில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெருக்க, தமிழ் தொழில்நுட்ப அறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அலச ஏற்பட்ட ஒரு அமைப்பு. உத்தமம், இங்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / இலாப நோக்கு இல்லாத ஒரு அமைப்பு . தற்சமயம் இவ்வமைப்பிற்கு நான் பொருளாளராக உள்ளேன்.

உத்தமம் பற்றி அறிந்து, அதன் உள் நடைமுறைகளை அறியாதவர்கள், இந்த அமைப்பிடம் அநேக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்ததால் உத்தமம் தமிழ் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஒன்றையும் வழி நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கக்கூடும். ஒரு கோணத்தின் பார்வையில் அதில் உண்மையிருக்கலாம். ஆயினும், உத்தமம், எதையும் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு அல்ல. மேலும் எழுத்துருவிற்கான தரவு போன்ற விவாதங்களில், பல தரப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த, மாற்றுக் கருத்துக்களுக்கு இணக்கம் காட்டாத கடுமையான நிலைகளுக்கு நடுவில், உத்தமம் செயலிழந்து நின்றது என்பது உண்மை. கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்த அமைப்பு இப்போது மீண்டும் ஊக்கத்துடன் செயல்பட முயற்சிக்கின்றது.

தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் முன்னேற, பன்னாட்டு முகத்துடன் கூடிய ஒரு அமைப்பு பெரும் உதவியாகயிருக்கும் என்றே நம்புகின்றேன். அந்தவிதத்தில் உத்தமம் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஒரு அடையாளத்தைத் தரத்தான் செய்தது. பன்னாட்டு நிறுவனங்களும் ( உம்: Microsoft, Oracle), பன்னாட்டு தரவு சார்ந்த அமைப்புகளும் (உம் : Unicode Consortium) உத்தமத்துடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டன . இவை உத்தமத்தின் தேவையை, அது போன்ற அமைப்பிற்கு ஏற்படக்கூடிய உள்ளார்ந்த சக்தியை கோடிட்டுக் காட்டுகின்றது. ஆக இந்த அமைப்பு வலுவாக வளர வேண்டும். இந்த அமைப்பை செயல் திறனுள்ள ஒரு அமைப்பாக நடத்தி, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, தமிழ் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்கள் இந்த அமைப்பின் அங்கத்தினர்களாகச் சேர வேண்டும் என்பதே என் அவா. உத்தமத்தின் இணையத்தள முகவரி: www.infitt.org

? இன்று அமெரிக்காவில் 1000 குழ‌ந்தைக‌ளுக்கு மேல் த‌மிழ் க‌ற்றுக் கொள்கின்ற‌ நிலையை உருவாக்க‌ அடித்த‌ள‌மிட்ட‌வ‌ர்க‌ளுள் முத‌ன்மையான‌வ‌ர் நீங்கள். இந்தத் த‌மிழ் ப‌ள்ளி நிர்வாக‌ம், பாட‌த்திட்ட‌ம், த‌மிழ் க‌ற்றுக் கொடுக்கும் த‌ன்னார்வ‌ல‌ர்க‌ள் குறித்து வாச‌க‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்?

நான் தமிழ் வளர்ப்புக்காகப் பங்கு பெற்ற முயற்சிகளுள் இதை எதிர்பார்ப்பிற்கு மேலாக வெற்றி பெற்ற முயற்சி என்று கூற வேண்டும். சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழ் அமெரிக்கர்களின் இளைய தலைமுறைக்குத் தமிழ் கற்பித்து அவர்களுக்குள் தமிழன் என்ற அடையாளத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அது இன்று CTA (Calfornia Tamil Academy கலிபோர்னியா தமிழ்க் கழகம் - www.catamilacademy.org ) என்ற வடிவத்தின் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1990-களின் பிற்பகுதியில் நாங்கள் நான்கு நண்பர்கள் இணைந்து, தமிழ் அறக்கட்டளை (TNF - Tamil Nadu Foundation) என்ற அமைப்பின் கீழ் இங்கு சான்பிரான்சிஸ்கோ பகுதியில், பிரீமாண்ட் (Fremont) என்னும் புறநகர்ப் பகுதியில் தமிழ் கற்றுக் கொடுக்க முயன்றோம். பல நடைமுறைச் சிக்கல்களால் அம்முயற்சி ஒரு வருடத்திற்குப் பிறகு தொடரவில்லை. ஆனாலும் மனம் தளராமல் இந்த நால்வரில் ஒருவரான திருமதி.செல்வி இராசமாணிக்கம், தமிழ் அறக்கட்டளையுடன் தொடர்பேதுமில்லாமல், தனியாகவே இங்கு கூப்பர்டினோ (Cupertino) என்னும் புறநகரில் , CTA என்னும் பெயரிட்டு தம் முயற்சிகளைத் தொடர்ந்தார். பிறகு நானும் அதில் இணைந்து பிரீமாண்டிலும் CTA கிளை ஒன்றை நடத்த ஆரம்பித்தோம். இன்று CTA விற்கு ஐந்து கிளைகளுண்டு. இதில் கிட்டத்தட்ட 1080 மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள். ஐந்து கிளைகளும் ஒரே மாதிரியாக எங்கள் நிர்வாகக் குழுவின் கண்காணிப்பில் நிர்வாகிக்கப் படுகின்றது. தற்சமயம் ஐந்து கிளைகளின் முதல்வர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேர் நிர்வாகக் குழுவில் இருக்கின்றோம்.

தமிழ்ப்பள்ளி, செப்டம்பரிலிருந்து மே மாதக் கடைசி வரை ஞாயிறு தோறும் ஒன்றரை மணி நேரத்திற்கு நடைபெறுகின்றது . ஞாயிறு காலை மட்டும் இங்குள்ள பள்ளியையோ, கல்லூரியின் வசதிகளையோ வாடகைக்கு எடுத்து வகுப்புகளை நடத்துகின்றோம். வகுப்புகளிலும் மழலை-1 ல் (PreSchool-1) ஆரம்பித்து 7 ஆம் வகுப்பு (Grade 7) வரை மொத்தம் பன்னிரண்டு வகுப்புகள் உள்ளன. மூன்று வயதிலிருந்து (பெற்றோரை விட்டு வகுப்பில் தனியாக அமரவேண்டும், potty-trained இருக்க வேண்டும் ) பதினான்கு வயது வரையுள்ள மாணவர்கள் உண்டு. ஒவ்வொரு வகுப்பிலும் சொல்லித் தரப்படும் மேலெழுந்தவாரியான உள்ளடக்கம் எங்கள் வலைத்தளத்தில், skillset என்னும் ஆவணத்தில் காணலாம்.

முதல் ஐந்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை எங்கள் CTA பாடத்திட்ட குழுவே வடிவமைத்து, இங்கு அமேரிக்க வாழ் சூழலிற்கு ஏற்ப உருவாக்கினார்கள். பிறகு சென்னையில் ஒரு தமிழாசிரியர் குழுவின் எழுத்துக்களின் மூலம் அது நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த புத்தகங்களுடன் சேர்த்து அந்த வகுப்பிற்கான ஒளி,ஒலி குறுந்தகடொன்றும் (DVD) உண்டு. இது மாணவர்கள் கற்க எளிதாக, பயனுள்ளதாக உள்ளது என்பது எங்கள் கணிப்பு. பிற்பட்ட ஏழு வகுப்புக்களுக்கும் நாங்கள் தமிழக அரசின் புத்தகங்களையே உபயோகிக்கின்றோம். ஆனால் பிற்பட்ட வகுப்புகளுக்கு அதிக மாணவர்கள் வருவதில்லை. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு நாளும் என்ன சொல்லித் தரவேண்டும் என்ற விவரமான, ஆழமான பாடத் திட்டத்தை எங்கள் பாடத் திட்டக்குழு மூலம் வகுத்து வைத்திருக்கின்றோம். அதை அந்தந்த ஆசிரியர்களிடம் கொடுத்து விடுவோம். ஆசிரியர்கள் அல்லாத ஆசிரியர் பயிற்சி பெறாத, ஆர்வலர்களே பகுதி நேர ஆசிரியர்களாக மாறிப் பணியாற்றுகின்றனர். எங்கள் சூழலிற்கு இது மிகவும் பொருந்துகின்றது . ஒரு ஆசிரியரின் கீழ் அதிக பட்சம் மாணவர்கள் எட்டு என்பதே எங்கள் வரையறை. இதன்படி எங்கள் பள்ளியில் கிட்டத்தட்ட 150 பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இப்பள்ளி பல ஆர்வலர்களின் உழைப்பில், ஆர்வத்தில், முயற்சியில் நடக்கின்றது . ஐந்து கிளைகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 175 ஆர்வலர்களுக்கு மேலுண்டு. நல்லதொரு நடப்பிற்காக, ஊர் கூடி தேர் இழுக்கின்றோம். இது மனதிற்கு நிறைவான ஒரு அனுபவம்.

? மேற்கத்தியர்களிடமும் உலக அறிஞர்களிடமும் நாம் தமிழைக் கொண்டு செல்ல, பெர்க்கிலி தமிழ் இருக்கை ஒரு நல்ல அடித்தளம், என்றீர்கள். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலோ , கட்டுரை வடிவிலோ, புத்தக வெளியீட்டிலோ தமிழ் இருக்கை மூலம் நிகழ்ந்தவை குறித்து, குறிப்பிடத்தக்க வகையில் செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து கருத்துச் சொல்ல முடியுமா?

அ) முதலில் பெர்க்கிலி போன்றதொரு உலக அங்கீகாரம் பெற்ற, உலக அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்வி மையத்தில் தமிழ்ப் பீடம் இருப்பது, தமிழை வெளிநாட்டு அறிஞர்களுக்கு அடையாளம் காட்ட உதவுகின்றது.

ஆ) தமிழ்ப் பீடம் வருடா வருடம் ஏப்ரல்-மே மாதம் போல் தமிழ் சார்ந்த தலைப்புகள் கொண்டு ஒரு குறு மாநாடு ஒன்று நடத்துகின்றது. இதற்கு மொழி இயல் அறிஞர்கள் பலர் வருகை தருகின்றனர். எடுத்துக்காட்டாக கடந்த மூன்று ஆண்டாக சோணாடு (சோழ நாடு), (தமிழகக் ) கோவில்கள், (பண்பாட்டுப்) பாலம் என்னும் தலைப்புகளில் தமிழ்ப் பீடம் குறு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இம்மாநாடுகளில் பல அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டறிந்த விபரங்களையும், ஆராய்ச்சி ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றனர். இது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் குன்றிவிடாமல் அதை ஊக்குவித்து வளர்த்து விடுகின்றது. பேராசிரியர் ஹார்ட் புறநானூறை ஆங்கிலத்தில் "The four hundred songs of War and Wisdom" என்று மொழிபெயர்த்து புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இப்பொழுது அகநானூறை மொழிபெயர்த்துக் கொண்டுள்ளார். இதற்கெல்லாம் பெர்க்கிலி தமிழ் பீடச் சூழல் ஒரு உந்து சக்தி என்றே எண்ணுகின்றேன்.

இ) பேராசிரியர் ஹார்ட்டின் எண்ணம், இங்கு தமிழ்ப் பீடத்தில் தமிழ் அறிவு கொண்ட மொழி வல்லுனர்களை உருவாக்கினால், அவர்கள் ஆராய்ச்சியாளர்களாகவோ, ஆசிரியர்களாகவோ மற்ற பல்கலைக் கழகங்களுக்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் செல்லும் பொழுது மற்ற இடங்களிலும் தமிழின் தாக்கம் தென்படும் என்பதே. அதாவது "Train the Trainers". அவர் கூற்றின்படி இந்தக் கண்ணோட்டத்திலும் தமிழ்ப் பீடம் வெற்றிகரமாகவே செயல்படுகின்றது. மேற்கூறிய செயல்பாடுகளால் தமிழ்ப் பீடம் தமிழ் மொழி வளத்தை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆயினும் இவை மட்டும் போதாது. செம்மொழி ஆக்கப் பட்டிருக்கும் தமிழுக்கான நடுவன் அரசின், தமிழக அரசின் திட்டங்களில், வெளிநாட்டு மையங்களுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் தமிழைக் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

? உத்தமம், எதையும் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு அல்ல என்றாலும் எழுத்துருவிற்கான தரவு போன்ற தன் பரிந்துரையை இந்திய நடுவனரசுக்கு அல்லது Unicode Consortium போன்றவற்றிற்குத் தெரிவித்து இதுதான் உத்தமத்தின் நிலைப்பாடு என்று சொல்லப்பட்டதா?

உத்தமம் நடுவன் அரசுடன் எந்த முக்கிய தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தமிழக அரசின் மூலமாக நடுவன் அரசை அணுகுவது ஒரு நியாயமான எதிர்பார்ப்பே. உத்தமத்திற்கு தமிழக அரசின் அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கத்தான் செய்தது. 1999-ல் சென்னையில் நடந்த இணைய மாநாட்டின் தொடக்கத்தில் இருந்தே, அதாவது உத்தமம் என்ற அமைப்பு அதிகாரபூர்வமாக உண்டாவதற்கு முன்பே, இந்தத் தொடர்பு இருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அநேகர்தான் பிறகு 'உத்தமம்' என்ற அமைப்பை சிங்கையின் பொருளாதார ஆதரவில் ஆரம்பித்தவர்கள். ஆகவே தமிழக அரசின் தொடர்பும் ஆதரவும் உத்தமத்திற்கு தொடர்ந்து இருந்து வந்தது. சென்னை மாநாட்டில் அன்று இணையத்தில் அதிகமாக அறியப்பட்டு உபயோகிக்கப்பட்ட "TSCII" எழுத்துருவிற்கும் சென்னையின் சார்பில் முன் வைக்கப்பட்ட எழுத்துரு தரவிற்கும் இடையில் ஒரு திடமான தெளிவான முடிவைத் தேர்ந்தெடுக்க முடியாமல் ஒரு குழப்பமான முடிவே எடுக்கப்பட்டது என்பது என் எண்ணம். அப்பொழுது தொடங்கிய எழுத்துருவிற்கான விவாதம், உத்தமத்திலும் தொடர்ந்து இன்னும் முடிந்தபாடில்லை. விவாதத்தில் தவறில்லை. ஆனால் அதுவே ஒரு பிளவாகி, மற்ற முயற்சிகளையும், மற்றவர் கண்ணில் உத்தமத்தின் செயல்பாட்டிலும் நம்பிக்கையுறச் செய்துவிட்டது என்பது என் தாழ்மையான கருத்து.

Unicode Consortium (ஒருங்குறிச் சேர்த்தியம்) -த்தின் விவாதக் கூட்டங்களில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மேற்கத்திய நபர் உத்தமத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். ஆனால் அந்த பிரதிநிதித்துவம் சரியான அணுகுமுறையல்ல என்ற வலுவான எண்ணம் கொண்டவர்களும் உத்தமத்தில் இருக்கத்தான் செய்தார்கள் . இதைத் தவிர்த்து உத்தமம் இல்லாமல் தமிழக அரசும் "Unicode Consortium"த்தில் நேரடி பங்குபெற்று இந்த ஒருங்குறித் (UNICODE) தரவிற்கான விவாதத்தை நல்வழியில் நடத்தியிருக்க வேண்டும். 1990களின் கடைசியில் "Unicode Consortium" கூட்டத்திற்காக இங்கு (San Jose, Ca) வந்த தமிழக அரசின் அதிகாரிகளை அறிவேன். அவர்கள் செவிக்கு மட்டும் வேலை கொடுத்து, மற்று எந்த மாற்றுத் தரவுகளையும் முன் வைக்கவில்லை. காலம் கடந்து இந்த முயற்சிகள் தொடருகின்றன. ஆக, இந்த எழுத்துரு விவாதம் இன்றும் தொடர்ந்து, ஒரு பிளவாகி, மற்ற முயற்சிகளையும் பாதிக்கின்றது என்பது என் எண்ணம். இது வருத்தத்திற்கு உரியதுதான் .

? உத்தமத்தின் செயல்பாட்டில் நம்பிக்கையும், தொழில்நுட்ப உலகத்தின் எதிர்கால வழிகாட்டி என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டும் இல்லையா? அப்போதுதானே உத்தமத்தை செயல்திறனுள்ள ஒரு அமைப்பாக எண்ணி தமிழ் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்கள் இந்த அமைப்பின் அங்கத்தினர்களாகச் சேருவார்கள்...

நீங்கள் கூறுவதில் உண்மையுண்டு. பத்துத் தமிழர்கள் சேர்ந்தால் பன்னிரண்டு கருத்துக்கள் தோன்றுகின்றன என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இதே கருத்தை எனது ஐரிஷ் நண்பனுடன் அவன் சமூகத்தை பற்றி சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆக இது ஓரளவு இயற்கையே என்று தோன்றுகின்றது. ஆனால் நம் சமூக நலனை முன்னிட்டு, வெவ்வேறு கருத்துக்களையும் அணுகு முறைகளையும் தெளிவாக அலசிய பிறகு, ஒருமித்தக் கருத்தோடு நம் குழுமங்கள் செயல்பட வேண்டும். இதில், இப்பக்குவத்தில் நாம் பின்தங்கி உள்ளோமோ என்று நான் நினைப்பதுண்டு. உத்தமம் என்ற இந்த அமைப்பு எல்லாத் தமிழர்களுக்கும் சொந்தமான ஒரு அமைப்புதானே. இதில் மாற்றம் தேவை என்றால் அதில் ஈடுபாடு கொண்டு மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். தற்சமயம் உத்தமம் மீண்டும் சுறுசுறுப்புடன் முனைப்புடன் செயல்படத் துடிக்கின்றது. இந்த வருட இறுதியிலோ அடுத்த வருட தொடக்கத்திலோ தேர்தல்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஆவல் உள்ளோர் அதில் உறுப்பினர்களாகி அதை நல்வழியில் நடத்த உதவ வேண்டும் .

? ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ நீங்க‌ள் முன்னெடுத்த‌ துய‌ர் துடைப்பில் குறிப்பிடத்த‌க்க‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளாக‌ எதைக் க‌ருதுகிறீர்க‌ள்?

தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழன் வாழ வேண்டும், வளர வேண்டும். ஈழத்தமிழனும் அவனுடைய நிலப்பரப்பும் நம் அண்டை நாட்டில் குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கும் மேலாக அவன் படும் அல்லல்களுக்கு அளவேயில்லை. ஈழத் தமிழர்களின் துயரங்களும் அதன் அழுத்தங்களும் வெளி உலகத்திற்கு தெரிவதேயில்லை. தமிழகத் தமிழனுக்கே முழுமையாகத் தெரிவதில்லை. அரசின் சட்ட திட்டங்களாலும் செல்வாக்குடைய ஊடகங்களின் இருட்டடைப்பு, திரிபு போன்ற உத்திகளினாலும், தமிழகத் தமிழர்களின் உணர்வுகளைத் திசை திருப்பி வைத்துள்ளார்கள். இந்தச் சூழல் தமிழனாக நாம் ஈழத்தமிழனிற்கு அனுதாபம் காட்டா விட்டாலும், மனித நேயத்தோடான அனுதாபங்களும் குறைவாகவே வெளிக்காட்டும் ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது. இதையெல்லாம் காண மனம் பொறுக்குதில்லைதான் . ஆயினும் நம்மால் செய்ய முடிந்தது குறைவே. இங்கு Tamils of Northern California (TNC) என்ற ஈழத் தமிழர் அமைப்பொன்று உண்டு. இதில் உறுப்பினனாகயிருந்து, அவர்களுடன் இணைந்து, அகதிகளின் வாழ்வில் ஒரு சிறு ஒளியேற்ற, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO - Tamils Rehabilitaton Organization சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் இணையத்தள முகவரி: www.troonline.org ), சுனாமி நிவாரணக் குழு, International Medical Health Organization என்ற தொண்டு நிறுவனங்களின் மூலம் பொருள் உதவி செய்து வந்துள்ளேன். மேலும் ITTPO (International Tamil Technical Professionals' Organization -இணையத்தள முகவரி: www.ittpo.org ) என்ற அமைப்பில் பல இயக்குனர்களில் ஒருவனாக நானும் உள்ளேன். என்னால் முடிந்த பொருளுதவியும் இங்கு செய்து வருகின்றேன். போரால் சீரழிந்திருக்கும் வடகிழக்கு ஸ்ரீலங்காவில் ஈழத்துப் பகுதிகளில் தொழில் அறிவு சார்ந்த வளர்ச்சிகளை, அங்குள்ள மக்கள் பலன்பெறும் வகையில் கொண்டு வருவதே இவ்வமைப்பின் குறிக்கோள். இதன் அடிப்படையில்தான் 'VanniTech' (Vanni Institute of Technology - வன்னி தொழில்நுட்பவியல் நிறுவகம் இணையத்தள முகவரி: www.vanni.org ) என்ற தொழில்நுட்பப் பட்டறை ஒன்றை ITTPO தொடங்கி நடத்தி வருகின்றது . ஆனால் போர் சூழலில் இது நொண்டிக் கொண்டுதான் செயல்படுகின்றது. இந்த முயற்சிகளெல்லாம் ஈழத்தமிழனின் துயர்துடைப்பில் ஆக்கபூர்வமான செயல்கள்தான் என்றாலும் , ஈழத் தமிழருக்கான விடியலை நான் இன்னும் காணவில்லை. இருள் கலைந்து விடியல் வந்தே தீரும். அதுவரை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் நம் முயற்சிகள் தொடரும். தொடர வேண்டும்.

? இன்றைய அரசியல் சூழலில், ஈழத்தில் சுமூக நிலை நிலவ வேண்டும் என்ற ஒத்த கருத்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர். மருத்துவர். இராமதாசு, மதிமுக நிறுவனர் வைகோ போன்றவர்கள் தங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து ஈழத்தமிழர் பிரச்னைக்கான தீர்வை மத்திய அரசில் முன்வைத்தால் இந்தப் பிரச்னை எளிதில் தீர்க்கப்பட இயலுமே? இதை உணர்த்தும் வகையில் ஏதேனும் கையெழுத்து வேட்டை அல்லது மின்னஞ்சல் உத்தியை மேற்கொள்ளும் உத்தேசம் உண்டா?

ஈழத்தில் நடக்கும் இனவாத அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் அனைவரும் அக்கறை கொண்டவர்கள்தாம். ஆயினும் அவரவர்கள் தங்கள் உள்நாட்டு அரசியல் களத்தின் நெருக்கடிகளில் சிக்குண்டு ஒருமித்தக் கருத்தோடு நடுவன் அரசிடம் ஆணித்தரமாக வழக்காடவில்லை என்பது உண்மை. மேலும் நடுவன் அரசும் தமிழனைச் சந்தேகக் கண்களுடன் நோக்கி, ஸ்ரீலங்கா அரசிற்கு சாதகமான தந்திரமான செயல்பாடுகளில் இறங்குகின்றது. சமீப காலமாக இந்திய அரசு, ஸ்ரீலங்கா அரசிற்கு தரும் ஆயுதங்களை சத்தமின்றி கூட்டியிருக்கின்றது என்பதே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஈழத் தமிழனைக் கொல்வதற்கு நம் நடுவன் அரசிடமிருந்தே உதவி செல்கின்றது. உண்மை பேசத் துணிந்தவனை ஓரம் கட்டி சாயம் பூசி தனிமைப்பட வைக்கும் செல்வாக்குக் கொண்ட பத்திரிக்கையாளர்களும் சில வெகுசன ஊடகங்களும் தமிழகத்தில் உள்ளன. அநேகத் தமிழகத் தமிழனிற்கு இந்த உண்மையே தெரிந்திருக்காத நிலை. மற்றும் சிலருக்கு இது தெரிந்திருந்தும் இதைப் பற்றி விவாதிப்பதற்கோ இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கோ தயக்கம் காட்டும் சூழல். எனவே, தமிழகத் தமிழன் ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஈழத் தமிழனுக்கு சோதனையான காலமிது . கையெழுத்து வேட்டை / மின்னஞ்சல் உத்திகள் என்பன போன்றவற்றை இங்கு அமெரிக்காவில் பார்த்ததுண்டு. அதை முன் நின்று நடத்தாவிட்டாலும், அதில் கையெழுத்துப் போட்டுப் பங்கு பெற்றதும் உண்டு . இங்கு அது பயன் உள்ளதாகவும் இருந்திருக்கின்றது. ஆனால் இந்த உத்திகள் தமிழகத்தில் எந்த அளவு தாக்கத்தை உண்டு பண்ணும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் தாக்கத்தை உண்டு பண்ணுவதற்கான உத்திகள் பல ஆண்டுகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னிடமில்லை. ஆயினும் நியாயத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்புகள் உண்டு. அவை வீண் போகாது என்றே எண்ணுகின்றேன்.

? சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் என்ற அமைப்பு ஈழத் தமிழருக்கானதாக மட்டும் இயங்கும் அமைப்பா? தமிழகத்துக்கும் இதன் பங்களிப்பு ஏதும் உண்டா?

ஈழத் தமிழர்களால் தொடங்கப்பட்டு தற்சமயம் நடைமுறையில் ஈழத்தமிழருக்காக இயங்கும் அமைப்பு இது. அவர்களுக்குத்தானே இந்த உதவி இப்பொழுது அதிகம் தேவைப் படுகின்றது. ஈழத்தில் தொழில் நுட்ப கல்விக் கூடங்களோ, அதைக் கற்பிக்க நல்ல ஆசிரியர்களோ மிக சொற்பம். அவர்கள் தமிழக உறவுகளிடமிருந்து இந்த விடயத்தில் உதவியை நாடியே இருக்கின்றனர். அவர்கள் தமிழகக் கல்விக் கூடங்களிலிருந்தோ தமிழகத்தில் கற்பிக்கும் தொழில் நுட்ப வல்லுனர்கள் / ஆசிரியர்களிடமிருந்தோ வரும் உதவிகளை பெரிதும் மதித்துப் போற்றுவர் .

? எதிர்கால திட்டம் என்று மனதுக்குள் நீண்டகாலமாய் உலவும் எண்ணங்கள் ஏதும் உண்டா?

ஆசைகள் உண்டுதான். அதை நனவாக்கும் திட்டங்கள்தான் முழுமை பெறுவதில்லை. ஆகவே வெளியில் பகிர்ந்து கொள்ளுவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆக இப்போதைக்கு வரும் நாட்களை ஒவ்வொன்றாகத்தான் எதிர்கொள்கின்றேன், வாழ்கின்றேன்.

மின்காணல்:- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.









Monday, January 21, 2008

அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர் (3)


முனைவர், வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாப் ப‌ல்க‌லைக்க‌ழ‌கம், அமெரிக்கா.

தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ளவ‌ர்க‌ள் வ‌ரிசையில் இர‌ண்டாவ‌தாக‌ வ‌ல‌ம்வ‌ருகிறார், அமெரிக்காவின் பென்சில்வேனியாப் ப‌ல்க‌லைக்க‌ழ‌கத்தில் பணியாற்றி வருகின்றார் முனைவர் வாசு அரங்கநாதன்.


அறிமுக‌ம்.....

தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில் தமிழ்த்தொண்டைத் தொடர்ந்துவருபவர்.
1989 முதல் 1992 வரை சியாட்டலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் தமது இரண்டாவது முதுகலைப் பட்டப் படிப்பைச் செய்துகொண்டு கணிப்பொறி கொண்டு தமிழ் மொழியை ஆராயும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் இரண்டு ஆண்டுகள் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும்அதற்குப் பிறகு பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்திலும் தம‌து தமிழ்த்தொண்டைத் தொடர்கிறார். கடந்த பத்து வருடங்களாக பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதோடு, தமிழ்இலக்கியம் மற்றும் மொழியிலில் தம‌து ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறார்.
சங்ககால இலக்கியங்களையும் பக்தி இலக்கியங் களையும் ஆய்ந்து வருவதோடு கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்பிப்பது பற்றியும் தன‌து பணியைச் செய்துவருகிறார்.
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb ,
http://www.southasia.upenn.edu/tamil
போன்ற இணையப் பக்கங்களில் கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை வடிவமைத்துள்ளார். அமெரிக்காவின் மத்தியக் கல்வித்துறையின் உதவியோடு பக்கங்களை உலகெங்கிலும் உள்ள தமிழ் மாணாக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள தமிழ் வம்சாவழி மாணவர்களுக்கும் இப்பங்கங்கள் பயன்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பற்றி படிக்கும் அமெரிக்க மாணாக்கர்களும் இவ்விணையப் பக்கங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு பற்றிய விளக்கமான பாடங்கள் இவ்விணையப் பக்கங்களில் உள்ளன. அன்ப‌ர்க‌ளே அறிமுக‌ம் இங்கே நிறைவெய்துகிற‌து. இனி அவ‌ருட‌னான‌ காண‌லில் உட்புகுவோமா?
ஆல்ப‌ர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.
_______________________________________________
த‌மிழுக்கு தொண்டு செய்ய‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் த‌மிழ‌க‌த்தில் இருக்கும்போது ஏற்ப‌ட்ட‌ உண‌ர்வா? இல்லை அமெரிக்க‌ வ‌ந்த‌ பின் தோன்றிய‌தா?


அண்ணாமலைப் பல்கலைக்க கழகத்தில் மொழியியல் ஆராய்ச்சியாளனாக இருந்தபோதே தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வம் தொடங்கியது.
பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் வாஷிங்டன் பல்கலைக் கழகத்திலும் பணிபுரிந்த போது அங்கிருந்த நல்ல ஆராய்ச்சிச் சூழல் என்னுடைய தமிழ் ஆர்வத்துக்கு உறுதுணையாயிருந்தது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி கொண்டு தமிழ் மொழியை ஆராயும் பணியில் ஈடுபட்ட தாங்க‌ள் ஆய்வுப்ப‌ணி குறித்து கொஞ்ச‌ம் விப‌ர‌மாக‌ச் சொல்லுங்க‌ளேன்?
வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறையில் வகுப்புகள்எடுத்த போது மொழியியல் துறையின் பல்வறுஆராய்ச்சிகள் என்னைக் கவர்ந்தன. கணிப்பொறிகொண்டு தமிழை ஆய்வு செய்யும் புது உத்திகளைஅங்கு கற்றுக்கொண்டேன்.
1990ஆம் ஆண்டில் தொடங்கிய இணைய வளர்ச்சியோடு என்னுடைய மொழிஆராய்ச்சியையும் இணைத்துக்கொண்டேன்.இணையத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறுதமிழ் ஆராய்ச்சியாளர்களோடு எளிதாகத் தொடர்புகிடைத்தது.
முக்கியமாக கணிப்பொறியில் தமிழ் மொழிஅறிவை சேர்ப்பது என்ற ஆராய்ச்சியில் தொடங்கி கணிப்பொறிக்கு மொழியறிவை புகட்டுவது என்பதுவரையிலான ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டேன்.
கணிப்பொறி கொண்டு மொழி பெயர்ப்பு தகவல்தேடல் போன்ற ஆராய்ச்சியும் இதில் அடங்கும்.

இணையப் பக்கங்களில்
கணிப்பொறி வழி தமிழ்
மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை
வடிவமைத்துள்ள‌ த‌ங்க‌ளுக்கு இத‌ன் மூல‌ம் ப‌ய‌ன்பெற்ற‌ வெளிநாடுவாழ் த‌மிழ்மாணாக்க‌ர்க‌ள் த‌ங்க‌ளைத் தொட‌ர்புகொண்டு ந‌ன்றி ப‌ரிமாறிக்கொண்ட‌, உத‌வி கோரிய‌ நிக‌ழ்வுக‌ள் போன்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு வாய்த்திருக்கும். இதில் த‌ங்க‌ள் ம‌ன‌ம் நெகிழ்ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் க‌ண்டிப்பாக‌ இருக்கும்.
அப்ப‌டிப்ப‌ட்ட‌ம‌ல‌ரும் நினைவுக‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ இய‌லுமா?


பல மாணவர்கள் அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொள்வார்கள். சில உதவிகளை மின்னஞ்சல் மூலம் செய்வேன். போலந்திலிருந்து ஒரு மாணவர் விடாமல் இன்னும் தொடர்பு கொண்டு வருகிறார். எங்கள் இணையப்பக்கங்களில் ஒன்று விடாமல் பயன்படுத்திவிட்டு அங்கு கொடுத்துள்ள பயிற்சிப் பக்கங்களைச் செய்து எனக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்.
முடிந்த போதெல்லாம் உதவி செய்வேன். ஒரு முறை கொஞ்ச காலம் அவருக்கு மின்னஞ்சல் கொடுக்கவில்லை. எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று என்னுடைய பேராசிரியர் ஷிப்மெனுக்கு அஞ்சல் எழுதி வாசுவுக்கு ஏதோ ஆகிவிட்டது போல் இருக்கிறது!
அவர் நன்றாக இருக்கிறாரா? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். எங்களது தமிழ் இணையப்பக்கங்களுக்கு நான் இப்படியாக உயிர் கொடுக்கவேண்டியிருக்கிறது!
இதுதான்....உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்! அமெரிக்காவில் உள்ள தமிழ் குழந்தைகள் உங்கள் தமிழ்ப் பக்கங்களைப் பயன்படுத்துவது குறித்து ஏதும் புள்ளிவிபரம் தர இயலுமா?


புள்ளிவிவரம் ஒன்று எதுவும் இல்லை. எங்களின் விருந்தினர் பக்கத்தில் தமிழ்ப் பக்கங்களைக் குறித்து பலர் எழுதியுள்ளனர். பார்க்க....
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/guest/tamilguest.htmlஉலகத்தின் பல நாடுகளிலிருந்தும் எங்களைத் தொடர்புகொண்டு எப்படியெல்லாம் எங்கள் பக்கங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று பலர் எங்களுக்கு எழுதியுள்ளனர். எங்கள் இணையப்பக்கங்கள் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
இது மகிழத்தக்கது. பல மாணவர்கள் நன்றி தெரிவித்து மடல்கள் எழுதியுள்ளனர்.


இணைய‌ம் மூல‌ம் த‌மிழ் க‌ற்க நீங்கள் எடுக்கும் முயல்வுகளுக்குப் பென்சில்வேனியா ப‌ல்க‌லை த‌குந்த‌ உத‌விக‌ளைச் செய்கிற‌தா?

இதுவரை நான் கேட்ட எதற்கும் இவர்கள் இல்லை என்று சொன்னதில்லை. கேட்பதற்குத்தான் நேரம் இல்லை.


இதுத‌விர‌ தமிழுக்காக‌ நீங்க‌ள் ஆற்றும் ப‌ணிக‌ள் குறித்துச் சொல்லுங்க‌ளேன்?


தமிழ் வம்சாவழி குழந்தைகளும் மாணாக்கர்களும் தமிழைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் குறித்தான பணிகள் பலவற்றை என்னால் இயன்றவரை செய்து வருகிறேன்.நான் வாழும் தென் ஜெர்சியில் ஒரு தமிழ்ச்சங்கத்தைநிறுவி இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்குத்தமிழ்ப்பள்ளி ஒன்று நடத்தி வருகிறேன். இவர்களுக்காக ஒரு பாடப் பயிற்சி பக்கம் ஒன்று அமைத்துள்ளேன்.(http://rewardzone.thetamillanguage.com/ ). டெலவர் பெருநிலத் தமிழ்சங்கத்தின் http://www.tagdv.org/ ) சங்கமம் என்ற தமிழ் மலரின் ஆசிரியராக இருக்கிறேன். தமிழகச் சூழலை இங்கு ஏற்படுத்துவதே இப்பணிகளின் நோக்கம். எதிர்காலத் திட்டம் என்று உங்கள் எண்ண அதிர்வுகளில் இருக்கலாம். அது குறித்துச் சொல்லுங்களேன்? தமிழைப் புது முறையில் கற்பதற்கான வழியில் அமைக்கப்பட்ட பக்கம்http://rewardzone.thetamillanguage.com/reward_images/screenshots.html . இதை எங்கள் சமூகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை எங்கள் பல்கலைக்கழகத் தமிழ்ப்பக்கத்தோடு இணைத்து உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் பயன்படும்படி வடிவமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். சங்கம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியங்கள் மின்வடிவில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில் இவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தி தமிழ் மொழி மற்றும்இலக்கிய வரலாறு, தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறை முதலியன பற்றி புதுக்கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்யவேண்டியது மிக முக்கியமான ஒன்று. இவ்வகையில் http://www.thetamillanguage.com/etext/ என்ற பக்கத்தில் தமிழ் இலக்கியங்களை வெவ்வேறு கண்ணோட்டத்தில் காண ஒரு சொற்தேடலக்கான வசதியைச் செய்துள்ளேன். தமிழ் மற்றும் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சி குறித்தான ஆய்வுகளில் நான் என்னை மேன்மேலும் ஈடுபடுத்திக்கொள்வேன்.