தங்கள் வாழ்வாதாரத்துக்காக
தாய்த்தமிழகத்திலிருந்து
புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர்
தமிழர்கள் மத்தியில் தமிழில் பேசுவதைத்
தவிர்த்து அயல்மொழியோடு ஆலிங்கனம்
செய்துகொண்டு ஆடைகளைவதைப்போல
தமிழைக் களைந்தெறிந்து வாழும் தமிழ்க்
குடும்பங்களுக்கு மத்தியில் தமிழை வளர்க்க,
நேசிக்க மழலைகளின் அதரங்களில் தமிழைத்
தவழவிட தன்னார்வ தமிழர்களும் இருக்கிறார்கள்
என்பதுதான் ஆறுதலான விடயம்!
தமிழன் கடல் கடந்து போனாலும் தன் மொழிப்பற்றை
சிலர் கைவிட்டாலும் சிலர் தாங்கிப்பிடித்து
மொழியுணர்வை விதைக்கும் விவசாயியாய்
அமெரிக்க மண்ணில் வலம் வருவதில் நெஞ்சு
நெகிழ்கிறது!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும்
"மொழி"
என்ற தன் சொந்த அடையாளத்தைத்
தொலைத்துவிடக்கூடாது!
தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர்
இல்லங்களில், உள்ளங்களில் வேர்
பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!
அமெரிக்கத் தமிழர் இல்ல மழலைகள்
நேசித்துச் சுவாசிக்கத் தமிழமுதை
விருந்தாக்கியளிக்கும் தமிழன்பர்களை
நாம் நன்றியோடு நினைக்கப்படவேண்டியவர்கள்!
வள்ளுவன் எந் நன்றிகொன்றார்க்கும் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்கிறதற்கொப்ப
அடுத்த தலைமுறைக்கான மொழியுணர்வை
வளர்த்தெடுக்கும் இவர்களை உலகத் தமிழர்களின்
பார்வைகளுக்கான தமிழ்த்தினையில் நேர்காணல்
செய்து முன்னிடுகிறேன்.
இவர்கள் தமிழை,
தவமாய்,
வேதமாய்,
வேள்வியாய்,
சுவாசமாய்,
உயிராய்,
உணர்வாய் நேசித்து
தமிழ் வாழ வளர தங்களை
மெழுகுவர்த்தியாய்
ஆக்கிக்கொண்டுள்ள
இவர்கள் குடத்திலிட்ட விளக்காய்
இருக்கிறார்கள்!
இவர்களைக் குன்றிலிடும் எளியோனின்
அரிய முயற்சி இது!
காலதேவனின் ஓட்டத்தில் கரைந்து
மறைந்துவிடாமலிருக்க இந்தப் பதிவுகள்
காலத்தின் கட்டாயம்!
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
No comments:
Post a Comment